திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.50 திருவலிவலம்
பண் - பழந்தக்கராகம்
ஒல்லையாறி உள்ளமொன்றிக் கள்ளம்ஒழிந் துவெய்ய
சொல்லையாறித் தூய்மைசெய்து காமவினை யகற்றி
நல்லவாறே உன்றன்நாமம் நாவில்நவின் றேத்த
வல்லவாறே வந்துநல்காய் வலிவல மேயவனே.
1
இயங்குகின்ற இரவிதிங்கள் மற்றுநற் றேவரெல்லாம்
பயங்களாலே பற்றிநின்பால் சித்தந்தெளி கின்றிலர்
தயங்குசோதி சாமவேதா காமனைக்காய்ந் தவனே
மயங்குகின்றேன் வந்துநல்காய் வலிவல மேயவனே.
2
பெண்டிர்மக்கள் சுற்றமென்னும் பேதைப் பெருங்கடலை
விண்டுபண்டே வாழமாட்டேன் வேதனை நோய்நலியக்
கண்டுகண்டே யுன்றன்நாமங் காதலிக் கின்றதுள்ளம்
வண்டுகிண்டிப் பாடுஞ்சோலை வலிவல மேயவனே.
3
மெய்யராகிப் பொய்யைநீக்கி வேதனை யைத்துறந்து
செய்யரானார் சிந்தையானே தேவர் குலக்கொழுந்தே
நைவன்நாயேன் உன்றன்நாமம் நாளும் நவிற்றுகின்றேன்
வையம்முன்னே வந்துநல்காய் வலிவல மேயவனே.
4
துஞ்சும்போதுந் துற்றும்போதுஞ் சொல்லுவ னுன்னிறமே
தஞ்சமில்லாத் தேவர்வந்துன் தாளிணைக் கீழ்ப்பணிய
நஞ்சையுண்டாய்க் கென்செய்கேனோ நாளும் நினைந்தடியேன்
வஞ்சமுண்டென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.
5
புரிசடையாய் புண்ணியனே நண்ணலார் மூவெயிலும்
எரியஎய்தாய் எம்பெருமான் என்றிமை யோர்பரவும்
கரியுரியாய் காலகாலா நீலமணி மிடற்று
வரியரவா வந்துநல்காய் வலிவல மேயவனே.
6
தாயுநீயே தந்தைநீயே சங்கர னேயடியேன்
ஆயுநின்பால் அன்புசெய்வான் ஆதரிக் கின்றதுள்ளம்
ஆயமாய காயந்தன்னுள் ஐவர்நின் றொன்றலொட்டார்
மாயமேயென் றஞ்சுகின்றேன் வலிவல மேயவனே.
7
நீரொடுங்குஞ் செஞ்சடையாய் நின்னுடைய பொன்மலையை
வேரொடும்பீழ்ந் தேந்தலுற்ற வேந்தனி ராவணனைத்
தேரொடும்போய் வீழ்ந்தலறத் திருவிர லால்அடர்த்த
வாரொடுங்கும் கொங்கைபங்கா வலிவல மேயவனே.
8
ஆதியாய நான்முகனு மாலு மறிவரிய
சோதியானே நீதியில்லேன் சொல்லுவன் நின்றிறமே
ஓதிநாளும் உன்னையேத்தும் என்னை வினைஅவலம்
வாதியாமே வந்துநல்காய் வலிவல மேயவனே.
9
பொதியிலானே(*) பூவணத்தாய் பொன்திக ழுங்கயிலைப்
பதியிலானே பத்தர்சித்தம் பற்றுவி டாதவனே
விதியிலாதார் வெஞ்சமணர் சாக்கிய ரென்றிவர்கள்
மதியிலாதார் என்செய்வாரோ வலிவல மேயவனே.

(*) பொதியில் என்பது பொதிகைமலை. வைப்புத்தலங்கள் ஒன்று.
10
வன்னிகொன்றை மத்தஞ்சூடும் வலிவல மேயவனைப்
பொன்னிநாடன் புகலிவேந்தன் ஞானசம் பந்தன்சொன்ன
பன்னுபாடல் பத்தும்வல்லார் மெய்த்தவத் தோர்விரும்பும்
மன்னுசோதி ஈசனோடே மன்னி யிருப்பாரே.
11
திருச்சிற்றம்பலம்

திருஞானசம்பந்தர் தேவாரம்
முதல் திருமுறை
1.123 திருவலிவலம் - திருவிராகம்
பண் - வியாழக்குறிஞ்சி
பூவியல் புரிகுழல் வரிசிலை நிகர்நுதல்
ஏவியல் கணைபிணை எதிர்விழி யுமையவள்
மேவிய திருவுரு வுடையவன் விரைமலர்
மாவியல் பொழில்வலி வலமுறை யிறையே.
1
இட்டம தமர்பொடி யிசைதலின் நசைபெறு
பட்டவிர் பவளநல் மணியென அணிபெறு
விட்டொளிர் திருவுரு வுடையவன் விரைமலர்
மட்டமர் பொழில்வலி வலமுறை யிறையே.
2
உருமலி கடல்கடை வுழியுல கமருயிர்
வெருவுறு வகையெழு விடம்வெளி மலையணி
கருமணி நிகர்களம் உடையவன் மிடைதரு
மருமலி பொழில்வலி வலமுறை யிறையே.
3
அனல்நிகர் சடையழல் அவியுற வெனவரு
புனல்நிகழ் வதுமதி நனைபொறி அரவமும்
எனநினை வொடுவரு மிதுமெல முடிமிசை
மனமுடை யவர்வலி வலமுறை யிறையே.
4
பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடு மவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே.
5
தரைமுதல் உலகினில் உயிர்புணர் தகைமிக
விரைமலி குழலுமை யொடுவிர வதுசெய்து
நரைதிரை கெடுதகை யதுவரு ளினனெழில்
வரைதிகழ் மதில்வலி வலமுறை யிறையே.
6
நலிதரு தரைவர நடைவரும் இடையவர்
பொலிதரு மடவர லியர்மனை யதுபுகு
பலிகொள வருபவன் எழில்மிகு தொழில்வளர்
வலிவரு மதில்வலி வலமுறை யிறையே.
7
இரவணன் இருபது கரமெழில் மலைதனின்
இரவண நினைதர அவன்முடி பொடிசெய்து
இரவணம் அமர்பெயர் அருளின னகநெதி
இரவண நிகர்வலி வலமுறை யிறையே.
8
தேனமர் தருமலர் அணைபவன் வலிமிகும்
ஏனம தாய்நிலம் அகழ்அரி யடிமுடி
தானணை யாவுரு வுடையவன் மிடைகொடி
வானணை மதில்வலி வலமுறை யிறையே.
9
இலைமலி தரமிகு துவருடை யவர்களும்
நிலைமையில் உணலுடை யவர்களும் நினைவது
தொலைவலி நெடுமறை தொடர்வகை யுருவினன்
மலைவலி மதில்வலி வலமுறை யிறையே.
10
மன்னிய வலிவல நகருறை யிறைவனை
இன்னியல் கழுமல நகரிறை யெழில்மறை
தன்னியல் கலைவல தமிழ்விர கனதுரை
உன்னிய வொருபதும் உயர்பொருள் தருமே.
11
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com